உயர்திரு சௌ. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள்,
இ.கா.ப., காவல்துறை
கூடுதல் இயக்குநர்,
உளவுத்துறை.
மைலாப்பூர்,
சென்னை-4
பெரும் மரியாதைக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.
2009 மே மாதம் இலங்கையிலுள்ள தமிழீழ மண்ணில் நடந்த திட்டமிட்ட இனப்படுகொலைக்கு முன்பும் பின்பும், இந்திய ஒன்றியம் தங்களது தந்தையர் நாடு என்ற பேரன்போடும், பெரும் நம்பிக்கையோடும் தாய்த்தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தவர்கள் ஈழத்தமிழர்கள். அவர்களுக்கு, பிற நாடுகளில் ஏதிலிகளுக்கு கிடைக்கப்பெறும் வசதிகளைப் போலல்லாமல், உரிமை குறைந்த, ஒரு நிம்மதியற்ற வாழ்வியல் சூழலே இங்குள்ள ஏதிலி முகாம்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது நாம் அனைவரும் அறிந்ததே. அதிலும் அவர்கள் சில சிறிய தவறுகள் செய்துவிட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைபட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனைக் காலத்திற்கும் மேலாகவும் பல மடங்கு கூடுதலாகவும் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள். தாங்கள் தமிழ்நாடு உளவுப்பிரிவின் காவல்துறைக் கூடுதல் இயக்குநராக பதவியேற்றதிற்கு பின்பு, ஏற்கனவே அங்கு அடைக்கப்பட்டிருந்த 78 ஈழத்தமிழர்களில் 10 பேரை விடுதலை செய்த நிகழ்வு, உலகம் முழுக்க வாழ்கின்ற தமிழர்களின் மனங்களில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக அனைத்து தமிழர்களின் சார்பாக, தமிழ்நாடு அரசிற்கும் தங்களுக்கும் எங்களது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.